பாடல் 851 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்

ராகம் - சிந்தோளம்
தாளம் - மி.ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான |
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச இருள்பிணி துஞ்ச ...... மலமாய எனதிடர் மங்க வுனதருள் பொங்க இசைகொடு துங்க ...... புகழ்கூறித் திருமுக சந்த்ர முருகக டம்ப சிவசுத கந்த ...... குகவேல சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழந டஞ்செய் ...... கழல்தாராய் மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு மகிழரி விண்டு ...... மருகோனே வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா அருகுறு மங்கை யொடுவிடை யுந்து மமலனு கந்த ...... முருகோனே அருள்செறி பந்த ணையிலிரு மங்கை அமளிந லங்கொள் ...... பெருமாளே. |
ஸஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் முருகப் பெருமானே, அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே.
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 851 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வினை, தந்த, தனதன, பெருமாளே, ஆகிய, மங்கை, நெஞ்சு, கந்த, சிவசிவ, செம்பொன்