பாடல் 837 - திருக்குடவாயில் - திருப்புகழ்

ராகம் - துர்கா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
சுருதி யாயிய லாயியல் நீடிய தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள் தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் துறவு மாயற மாய்நெறி யாய்மிகு விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள் சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் பருதி யாய்மதி யாய்நிறை தாரகை பலவு மாய்வெளி யாயொளி யாயெழு பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் பரம மாயையி னேர்மையை யாவரு மறியொ ணாததை நீகுரு வாயிது பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் கருது மாறிரு தோள்மயில் வேலிவை கருதொ ணாவகை யோரர சாய்வரு கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் களப பூண்முலை யூறிய பாலுணு மதலை யாய்மிகு பாடலின் மீறிய கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் குருதி யாறெழ வீதியெ லாமலர் நிறைவ தாய்விட நீறிட வேசெய்து கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் குடிபு கீரென மாமது ராபுரி யியலை யாரண வூரென நேர்செய்து குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே. |
வேதமாய், இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய், பலவுமாய், பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய், அடிப்படையாய், நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும் அனைத்தையும் துறந்த நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய், உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்*. (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ? யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து)**, (சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி, பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி), மிக்க பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும், தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும், திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து, முன்பு கொடியவனாக இருந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், (சமண்) பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என சிறந்த மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில்*** என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே.
* அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து வியக்கின்றார்.
** முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்.
*** திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 837 - திருக்குடவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, மிக்க, தகதிமி, யாய்மிகு, பன்னிரு, மயில், வேல், வந்த, மறைத்து, எவரும், பொருளாய், ஞானிகள், விரிவு, யாயெழு, பெருமாளே, பலவுமாய், பெரிய