பாடல் 817 - திருவாருர் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடா ரேசற் ...... றலஆவி கோதா னேன்மா தாமா றானாள் கோளே கேள்மற் ...... றிளவாடை ஈர்வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட் ...... டதுதீயின் ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடே றாரிற் ...... கெடலாமோ சூர்வா ழாதே மாறா தேவாழ் சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந் தோலா வேலா வீறா ரூர்வாழ் சோதீ பாகத் ...... துமையூடே சேர்வாய் நீதீ வானோர் வீரா சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, மேம்பட்டு விளங்கும் திருவாரூரில்* வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவனே, தேவர்கள் பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக புலவர் தம்மையே எண்ணிப் பாடியது.தாயாரின் கோபம், ஊர்ப் பெண்களின் ஏச்சு, வாடைக் காற்று முதலியன தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 817 - திருவாருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, உள்ள, சிவபெருமானுடைய, போல், காற்று, பெருமாளே, வாடைக்