பாடல் 785 - திருக்கடவூர் - திருப்புகழ்

ராகம் - பைரவி
தாளம் - ஆதி - 2 களை
- எடுப்பு - 1/4 இடம்
தாளம் - ஆதி - 2 களை
- எடுப்பு - 1/4 இடம்
தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன தாத்த தனத்தன தானன தானன ...... தனதான |
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர வீட்டி லடைத்திசை வேகசை மூணதி லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ ளாத்து வெனத்திரி யாபரி யாதவ மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப் பூட்டு சரப்பளி யேமத னாமென ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில் பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம் போற்றி நமக்கிரை யாமென வேகொள நாட்டி லொடுக்கென வேவிழு போதினில் பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக னாட்டை விடுத்திட வேபல சூதினில் வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய் வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது பார்த்து முடித்திட வேயொரு பாரத மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே கோட்டை யழித்தசு ரார்பதி கோவென மூட்டி யெரித்தப ராபர சேகர கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா கூற்று மரித்திட வேயுதை பார்வதி யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள் கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே. |
பிரமனது ஓலையில் கண்ட விதியின்படி, (இந்த உயிரைக்) கொண்டு போய் நல்ல உடலாகிய வீட்டில் சேர்த்து, பொருந்தும்படியாக (அடிக்கும்) சவுக்குப்போன்ற, (சுழுமுனை, இடைகலை, பிங்கலை என்னும்)* மூன்று நாடிகளை அதில் பொருத்தி அடித்துச் செலுத்த, கடலில் படகு ஓடுவது போலத் தடுமாறி காலம் கழித்து, நல்லது என்று நினைத்து பொன், பெண் ஆகிய ஆசைகளை மேற்கொண்டு, தூ எனப் பலர் இகழத் திரிந்தும், வருந்தியும், தவம் சேர்ந்துள்ள இடமே எங்கிருக்கின்றது என்று தெரியாமலும், இந்த உடலை விரும்பிப் பாதுகாத்து, வைரம் அழுத்தமாகப் பதித்த கழுத்தணி விளங்க, மன்மதன் இவன் என்னும்படி, உடலை ஆட்டியும் அசைத்தும் இயல்பாகத் திரியும் காலத்தில், நிரம்பின மலம் சேர்ந்த குகையோ, அல்லது சோற்றுப் பொதியோ இந்த உடல் என்னும்படி, கழுகும் காகமும் விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாகும் என்று கொள்ளும்படி, பூமியில் யாவும் அடங்கியாயிற்று என்று (இவ்வுடல்) விழுகின்ற, இறந்து போகும் அந்தச் சமயத்தில் கால்களில் பாம்பை அழுத்தமாகக் கட்டியுள்ள அழகிய மயிலின் மீது அமர்வோனே, நீ அருள் புரிவாயாக. (அரக்கு) மாளிகையில் (பஞ்ச பாண்டவர்களை) இருக்கச் செய்து, நெருப்பை இட்ட பாதகனாகிய துரியோதனன் நாட்டை விட்டுப் போகும்படி பல சூதாட்டங்களில் தோற்கடிக்க, விதியின்படி குருகுலத்து அரசராம் பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று, மாறு வேடம் பூண்டு அஞ்ஞாத வாசம் செய்திருந்த நாளின் முடிவைப் பார்த்து, வனவாசம் முடிந்திடவே, ஒரு பாரதப் போரையே மேலே நடக்கும்படித் துவக்கிவைத்த பெரிய வீரனாகிய திருமாலின் மருகனே, (சூரனது மகேந்திரபுரியின்) கோட்டைகளை அழித்து, அசுரர்களின் தலைவனான சூரன் கோ என்று கூச்சலிட (அவனுடைய நகரத்தை) நெருப்பு மூட்டி எரித்த பராபரப் பொருளே, அழகனே, கோக்கப்பட்ட இரத்தின ஒளிக்கு நிகரான கூரிய வேலனே, யமன் இறந்து போகும்படியாக (இடது காலால்) உதைத்த பார்வதி தேவியார்க்கும் இனிமை தரும் பெண்ணாகிய, மானின் வயிற்றில் பிறந்த வள்ளியின் மலை போன்ற மார்பகங்களுக்கு உரிய தலைவனே, திருக்கடவூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, காலபைரவ மூர்த்தியாக இருக்கும் தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 785 - திருக்கடவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, பிங்கலை, இடைகலை, தனத்தன, தாத்த, பத்து, பெயர், என்றும், இடது, காற்றுக்கு, ஒன்று, முனை, உள்ளது, யும், சுழு, சுவாசம், சென்று, விடும், நாடிகளுள், என்னும்படி, பார்த்து, மூட்டி, பூட்டு, வீட்டி, விதிப்படி, பார்வதி, பெருமாளே, உடலை, இவ்வுடல், மூன்று, சுழுமுனை, விதியின்படி, இறந்து