பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ்

ராகம் -
மனோலயம் - மத்யம ஸ்ருதி
தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24
தாளம் - ஆதி - 2 களை - திஸ்ரநடை - 24
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த தான தான தத்த தந்த ...... தனதான |
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல் வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன் வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே. |
ஆசை என்ற ஒன்றினால் உருவெடுத்த, துளைகள் உள்ள இந்த உடம்பு, சோறு கொண்டு வளர்க்கப்படும் இந்த சா£ரம், மாறி மாறி எண்ணம் கொள்ளும் இந்த மனம், இவையெல்லாம் அநியாயமான பிரபஞ்ச மயக்கத்தால் எடுத்தவனாக நான் வாட்டம் உறுகின்றேன். ஐயனே, எனக்கு இரக்கப்பட்டு வந்தருள்வாய் ஐயா, இனிப் பிறப்பதும் இறப்பதும் இல்லாமல், உன் வேலாயுதத்தால் என் வினைக்கூட்டங்களை தூளாகும்படி எரித்து, உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க. அன்பு நிறைந்த உன் அடியார் திருக்கூட்டத்தில் யானும் கலந்து, உன்னைப் போல பரிசுத்த உள்ளம் பெறவே, மகிழ்ச்சி கொள்ளும் கந்த வேளே நமக்கு உற்ற துணையாகும் என்றிருக்க பரிந்து அருள்வாயாக. காற்றிலே பரந்ததுபோலப் பரவியிருந்த சூரர்கள் இறக்கும்படி ஜயம் கொண்ட, யமன் போன்ற வலிமையும், சூரியன் போன்று பேரொளியும் அமைந்த சக்திவேலை அழகிய கையிலே கொண்ட முருகனே, மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த* திருமாலாகிய ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே, சேல் மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே, உன் புகழை ஓதும் பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே, தேவர்களும், பெண்டிரும், சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும் புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன் கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே, சேவற்கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.
* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் - சிவ புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 782 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கந்த, தத்த, பெருமாளே, கொண்ட, மாறி, தந்த, புராணம், தேர், சிவன், கொண்டு, னப்ப, னாலெ, கொள்ளும்