பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன தான தத்தனந் தான தத்ததன ...... தனதான |
பாட கச்சிலம் போடு செச்சைமணி கோவெ னக்கலந் தாடு பொற்சரணர் பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார் பார பொற்றனங் கோபு ரச்சிகர மாமெ னப்படர்ந் தேம லிப்பரித மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர் ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ டாட ளிக்குலம் பாட நற்றெருவி லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம் வாரு முற்பணந் தாரு மிட்டமென ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ சேட னுக்கசண் டாள ரக்கர்குல மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல் சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி யோர்கள் கட்டியம் பாட எட்டரசர் சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா நாட கப்புனங் காவ லுற்றசுக மோக னத்திமென் தோளி சித்ரவளி நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல் நாய கிக்குநன் பாக ரக்கணியும் நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே. |
கொலுசு, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், கோமேதகம் சேர்க்கப்பட்டது போல ஒன்று சேர்ந்து அசைகின்ற அழகிய பாதங்களை உடையவர். சித்திரப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போல் நுண்ணியதான இடையை உடையவர்கள். கனத்த, அழகிய மார்பகம் கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். இன்பகரமான வெல்லம் நல்ல சர்க்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்க் கூட்டங்களைக் கொண்ட கரிய கூந்தலில் விளையாடும் வண்டுகளின் கூட்டம் பாட, அழகிய தெருக்களில் சென்று, பறவை இனம் போல பல பல சொற்களை அமைந்த ராகங்களைப் பாடி, மிகுந்த முகஸ்துதியான பேச்சுக்களைப் பேசி வஞ்சித்து, இன்ப மொழியால், வாருங்கள், முன்னதாகப் பணத்தைக் கொடுங்கள், உங்கள் அன்பையும் கொடுங்கள் என்று சொல்லி, ஏணி வைத்து ஏறும்படி செய்து (பின்னர் இறங்க முடியாமல்) ஏணியை எடுத்துச் செல்பவர்களாகிய விலைமாதர்களின் செயல்களை நம்புதல் தகுமோ? ஆதி சேஷன் மெலிய, கொடும் பாதகர்களான அசுரர்கள் குலம் மாண்டு ஒழிய, எட்டு மலைகளும் அலை மிகுந்த ஏழு கடல்களும் ஒன்று சேர உலர்ந்து போகும்படியாக நின்று விளையாடிய வேல் ஏந்திய கைகளாகிய பன்னிரண்டு தோளின் மேல் விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் புகழ்ப் பாடல்கள் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள அரசர்கள் ஜே ஜே என்று தாளம் இட்டு முழங்க, செந்தாமரையில் வாழும் லக்ஷ்மி தேவி புகழும் வேலனே, நீ மனத்தில் விரும்பிச் சென்ற வள்ளி மலையில் இருக்கும் தினைப் புனத்தில் காவல் இருந்தவளும், உன்னைச் சுகமாக மயக்கியவளும், மெல்லிய தோளை உடையவளும் ஆகிய அழகிய வள்ளி நாயகிக்கு இன்பகரமான பாடல்களைப் பாடி, நாள் தோறும் அணிகலன்களை அணிவித்து மகிழ்பவனே, ஞானம் என்னும் மலையில் மகிழ்ந்து விளையாடும் பெருமான், தையல்நாயகி** என்னும் திருநாமம் உடைய தேவியை நல்ல தமது பாகத்தில் கொண்டவர், ருத்ராக்ஷ மாலை அணிந்துள்ள சிவபெருமான் மெச்சும்படி வந்து விளையாடி, முத்தம் அவருக்குத் தந்தருளும் பெருமாளே.
* வைத்தீசுரன் கோயில் முருகனுக்கு முத்துக் குமரர் என்று பெயர்.
** தையல்நாயகி என்பது வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் உமா தேவியின் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 781 - வைத்தீசுரன் கோயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தாடு, பாடி, தத்தனந், தத்ததன, மலையில், கொடுங்கள், வள்ளி, என்னும், வைத்தீசுரன், மிகுந்த, பெயர், இருக்கும், அணிந்துள்ள, பெருமாளே, பேசி, போடு, ஒன்று, தாளம், நல்ல, இன்பகரமான, விளையாடும்