பாடல் 758 - திருவரத்துறை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தத்தனத் தனன தத்தனத் தனன தத்தனத் ...... தனதான |
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற் கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக் களவு வித்தையட் டுளமு ருக்கிமுற் கருதி வைத்தவைப் ...... பவைசேரத் தறுக ணிற்பறித் திருக ழுத்துறத் தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச் சயன மெத்தையிற் செயல ழிக்குமித் தருணி கட்ககப் ...... படலாமோ பிறவி யைத்தணித் தருளு நிட்களப் பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும் பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச் சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச் சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன் செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த் திருவ ரத்துறைப் ...... பெருமாளே. |
கோபம் காட்டி மையைக் கண்களில் இட்டு, அன்புடனே அழைத்து, இயல் தமிழ்ப் பாக்களைச் சொல்லிச் சிரித்து உறவு கூறி விளையாடி, களவு வித்தைகளைக் கொண்டு மனதை உருகச் செய்து, முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படி, கொடுமை காட்டி அபகரித்து, இருவர் கழுத்தும் ஒன்றாகும்படி அணைத்து, நெகிழ்ந்து போய் உயிரும் சோரும்படி, படுக்கை மெத்தையில் செய்வது இன்னது என்று தெரியாத வகையில் செயல் அழிக்கின்ற இந்த இளம் பெண்களிடையே அகப் படலாமோ? பிறவிப் பிணியைத் தொலைத்து அருளக் கூடிய உருவமில்லாத, முழு முதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும் பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, சீகாழியில் நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே, உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும் பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்* வாழும் பெருமாளே.
* கொச்சை சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. மற்ற பெயர்கள் வருமாறு:பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரிபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம்.
** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர் ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.
*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 758 - திருவரத்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், புகழ், அவர், காட்டி, சிவிகை, களவு, படலாமோ, பெருமாளே