பாடல் 756 - திருக்கூடலையாற்றூர் - திருப்புகழ்

ராகம்
-....; தாளம் -
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான |
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல் மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத் தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல் தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய் வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள் நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல் கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ் நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே. |
என்னை வருத்திச் சூழ்ந்துள்ள வினையும், மண், பெண், பொன் என்ற மூவாசைகளும், தீயை மூட்டி உலையில் காய்ந்த பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல விரிந்து வெளிப்பட்டு என்னை மாட்டி வைத்து, என்னைப் பாய்ந்து வாழ்க்கை வழியில் பிடிவாதமாய் ஆட்டி வைக்கும் மாய வித்தை காரணமாய், கிடைத்துள்ள மலர், சந்தனம், புனுகுச் சட்டம், பன்னீர் இவைகளுடன் நல்ல காற்று வர அனுபவித்து, தாங்குவனவாய் மார்பில் அணிந்துள்ள முத்து மாலைகள் நன்கு கிடைத்ததென அணிந்து, அழகு பெற சோபையுடன் மகிழ்ச்சியும் அன்பும் மிகப் பெருக, மை தீட்டிய கண்கள் ஒளி பொருந்திய விலைமாதர்களுடன் விளையாடி, அந்தக் காம வலையில் பூட்டப்பட்டு அகப்பட்டு, நோய்களுடன் வலிகளும் வாத நோயும் எனப் பல வியாதிகள் ஒன்று சேர்ந்திட, நிலை மாறி வினைகள் கவ்விய அடியேனாகிய நானும் உனது அன்பு இல்லாமல், சேகரித்த பொருள் நிரம்ப இருப்பதால், ஒருவாறு மனம் தெளிவு பெற்று சாவு என்பதே இல்லை என்னும் எண்ணத்துடன் வாழ்நாளைச் செலுத்தி, யமன் தன் தூதுவர்களை ஓட்டி அனுப்ப, மெலிந்து போய், எழுத்துள்ளதும் பிரமனுடைய அடையாளம் கொண்டதுமான ஓலைச் சீட்டு வர அதைப் பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடி உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக. வேடர்கள் மீது வெகுண்டு குறப் பெண் வள்ளியுடன் நட்பு கொண்டு, அஞ்ஞான நிலையரான அசுரர்களைச் சிவந்த ஓளி வீசும் வேலைச் செலுத்தி போர் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டு, தேவர்கள் தலைவனாகிய இந்திரனை வாழும்படி வைத்த கலைஞனே, மாறுபட்ட உருவத்தோடு சென்று மதுரையில் பல திருவிளையாடல்களை விளையாடி, வைகை ஆற்றில் மண் சுமந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரி புரங்களின் மேன்மையை எரித்து ஆண்ட சிவ லோகனும், (நந்தி என்ற) ரிஷப வாகனத்தில் ஏறினவருமாகிய சிவபெருமானுடைய இடது பாகத்தைக் கொண்ட தாய், மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும் நூல் போன்ற இடையையும், கோடிச் சந்திரர்களுடைய வடிவையும் எடுத்து வந்தாற் போல் அழகிய சிவகாமி, வலிய யமனைக் கோபித்து அழித்த பேரழகியாகிய பார்வதி தேவி மனம் குளிர அருளிய கந்த வேளே, வெள்ளாறும், மணிமுத்தா நதியும் ஒன்று கூடிய ஆறு நிறைந்து வரும் விளக்கம் கொண்ட இடத்தில் உள்ள கூடலையாற்றூரில்* வீற்றிருக்கும் சேந்தனே, மயில் வாகனனே, வள்ளி, தேவயானை ஆகிய இருவரோடு இணைந்து, யமன் (என்னை விட்டு) ஒதுங்கித் தாண்டி விழும்படி என்னுடைய உடலில் குடி கொண்டு வாழ்கின்ற குமரனே, தம்பிரானே.
* விருத்தாசலத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 756 - திருக்கூடலையாற்றூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, என்னை, தாத்ததனத், தாந்ததன, யமன், கொண்டு, என்னுடைய, கொண்ட, செலுத்தி, விளையாடி, தம்பிரானே, பெண், ஒன்று, மனம்