பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் - திருப்புகழ்

ராகம் - பைரவி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான |
பலபல தத்துவ மதனையெ ரித்திருள் பரையர ணப்படர் வடவன லுக்கிரை படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத வொலிமலி யத்திரு நடனமி யற்றிய கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ டனகச கத்துவம் வருதலு மிப்படி கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே புனமலை யிற்குற மகளய லுற்றொரு கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை கிழவிய றச்சுக குமரித கப்பனை மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே. |
பலபல தத்துவ சேஷ்டைகளையும், அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, நடன ஜோதியை பரந்த ஆகாச வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு வழிகளையும் மாற்றி அடைத்து, ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ மயமாய் முற்றும் பரந்த பர வெளியில், கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின் ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த சுகானந்தக் கடலில் முழுகி, பார்வதி தேவி மின்னலை ஒத்த சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை எனக்குத் தந்தருளுக. இழிந்தவர்களும், திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய (திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே, தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய மார்பனே, மேரு மலையை வில்லாகப் பிடித்த சிவ பெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷ¡யாணி என்ற) உமாதேவி பெற்றருளிய முருகோனே, மகிழ்ச்சி தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருவெண்ணெய்நல்லூர் சாலை ரயில் நிலையத்துக்கு வடக்கே 4 மைலிலும், பண்ணுருட்டிக்கு மேற்கே 15 மைலிலும் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தத்தன, முனை, வந்து, தகதிமி, இடைகலை, பத்து, அழகிய, பிங்கலை, நடனம், வெளியில், உள்ளது, யும், பெயர், சுழு, மைலிலும், சுவாசம், ஒன்று, விடும், நாடிகளுள், காற்றுக்கு, என்னும், முருகோனே, பெருமாளே, வெட்டிய, தத்துவ, பலபல, பரந்த, திரு, இடது, சென்று, உள்ள, ஆகிய, என்றும்