பாடல் 742 - திருத்துறையூர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன தனதான தனத்தன தானன ...... தனதான |
வெகுமாய விதத்துரு வாகிய திறமேப ழகப்படு சாதக விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி வினையான கருக்குழி யாமெனு மடையாள முளத்தினின் மேவினும் விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல் தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச் சதிகாரர் விடக்கதி லேதிரள் புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ உககால நெருப்பதி லேபுகை யெழவேகு முறைப்படு பாவனை யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி உலவாந ரகுக்கிரை யாமவர் பலவோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித் தொகலாவ தெனக்கினி தானற வளமாக அருட்பத மாமலர் துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா துதிமாத வர்சித்தர்ம கேசுரர் அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே. |
எண்ணிலாத மாய வகைகளால் உடலாக உருவெடுக்கும் இயல்பிலே பழகப்படுகின்ற பிறப்பு வகைகள் ஏழு கடல்களைக் காட்டிலும் பெரிதாகும். அத்தகைய பிறப்பில் சுழன்று வினைக்கு ஈடான கருக்குழி சேரும் என்கின்ற அறிகுறியானது என் உள்ளத்தில் பதிந்து இருந்த போதிலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற மூத்தோர் வாசகம் பொருத்தமானது. அந்த விதி என்னைப் பிடித்து நெருங்கிய கயிற்றால் அழுத்தமாகக் கட்டி பெரிய உடம்பிலுள்ள சாக்கடை வழியே உருவம் அடைந்து (குழந்தையாய்) வெளிவர, மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேட்டைகளுடன், மாமிசத்தில் திரண்டு புழுப் போல நெளிவுண்டு, நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல உடலை உருக்குகின்ற வேதனைகளையும் ஒழிக்க மாட்டேனோ? யுகாந்த காலத்தில் வடவாமுகா அக்னி நெருப்பில் புகை உண்டாகி வேகின்ற மாதிரி கோபக் குறிகளை (இரக்க வந்தவரிடம்) காட்டி, உலையில் புடம் வைப்பது போல் உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளிவருவதால், அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பலருடைய வீட்டு வாசலுக்குப் போய் அவர்கள் எதிரே நின்று, மனம் வெட்கப்பட்டு, மிகவும் குழைந்த மனத்தினனாய் அவர்களுடன் உறவு பூண்டு சேர்தல் எனக்கு இனியேனும் ஒழிவதற்காகவும், நான் செப்பம் அடையவும், உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்களை எனக்குத் துணையாக, நான் தொழுவதற்குத் தருவாயாக, மயிலையும் வேலையும் உடையவனே, துதிக்கின்ற பெரிய தவசிகளும், சித்தர்களும், சிவன், திருமால், பிரமன் இவர்களுக்கு எல்லாம் திருவருள் பாலிக்கும், திருத்துறையூர்* என்னும் ஊரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 742 - திருத்துறையூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானன, தனத்தன, நான், திருவருள், நெருப்பில், பெருமாளே, கருக்குழி, என்கின்ற, பெரிய