பாடல் 730 - திருவாமாத்தூர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தனதன தானத் தானன, தனதன தானத் தானன தனதன தானத் தானன ...... தனதான |
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள் கனதன பாரக் காரிகள் ...... செயலோடே பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள் பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள் புரிவது தானெப் போதது ...... புகல்வாயே தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே. |
கரிய மேகம் போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள். தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள். புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள். செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள். கொள்ளைக்காரிகள். பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க. கற்பகத் தருவை அழித்த ¨தரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன் அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர, தனதன தானத் தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய ஒப்பற்ற வீரனே, அரி, திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும், முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள், சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற மகனே, பாம்புடன், பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம் புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும் எழிலுடைய திருவாமாத்தூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 730 - திருவாமாத்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர்கள், தனதன, தானன, தானத், ஆகிய, என்னும், ஒப்பற்ற, மீனையும், சூடிய, காரிகள், பாவிகள், புரிவது, பெருமாளே