பாடல் 727 - சிறுவை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன தான தந்தன தானன தானன ...... தனதான |
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள் காத லின்பொருள் மேவின பாதகர் வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி வேளை யென்பதி லாவசை பேசியர் வேசி யென்பவ ராமிசை மோகிகள் மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும் மால யன்பர னாரிமை யோர்முனி வோர் புரந்தர னாதிய ரேதொழ மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி யேவி ரும்பி வினாவுட னேதொழ வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே நீல சுந்தரி கோமளி யாமளி நாட கம்பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ காம சுந்தரி யேதரு பாலக நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற மாநி லங்களெ லாநிலை யேதரு ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே ஆட கம்பயில் கோபுர மாமதி லால யம்பல வீதியு மேநிறை வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே. |
வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும் பாதகிகள் ஆவர். வந்தவரிடம் வீணாகப் பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர். பரத்தையர் எனப்படும் இவர்கள் இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும், திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல், நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது, வாழும் வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி அருள்வாயாக. நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள், கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள், சிறந்த ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை அணிந்தவள், உமையவள், காளி, அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள், சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே, கங்கை நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய முருகேசனே, ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம்* என்னும் தலத்தில் விளங்கும், திருமாலின் மருகனே, பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள், கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள அழகிய சிறுவாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* சிறுவாபுரியில் உள்ள திருமாலுக்கு 'திருவூரகப் பெருமாள்' என்று பெயர்.
** சிறுவைத்தலம், சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 727 - சிறுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, பெரிய, சுந்தரி, தந்தன, சிறந்த, பெற்ற, ஆகிய, கோயில், உள்ளது, பெயர், விளங்கும், உடைய, சிறியேனும், மீது, கம்பயில், நாரணி, பெருமாளே, யேதரு, விலைமாதர்கள்