பாடல் 726 - சிறுவை - திருப்புகழ்

ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த தனன தான தனன தந்த ...... தனதான |
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. |
இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட உடலிலே புகுந்து, நல்வழி இல்லாத வேறு வழிகளிலே நெருங்கிப்போய், நோய் முதலிய துக்கங்களின் வேதனையுடன் தடுமாறி, பெருகும் கெட்ட வினைகளினால் கஷ்டப்பட்டு, இவ்வாறு பிறப்புக்கள் தோறும் அலைச்சல் அடைந்து, பிறவியின் உண்மைத்தன்மை ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல், தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும், அருமையான மெளன வழியைத் திறந்து காட்டுவதுமான உனது தாமரைப் பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல், மனிதர்களும், தேவர் தலைவர்களும் வணங்குகின்ற இனிமையான உன் தரிசனத்தை விரும்பி நன்மை அடையும் பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ? ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல் காத்திருந்த நக்கீர முனிவர் (குகையில் அடைபட்டாலும்) தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே மன அலைச்சலுற்று, குகையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது, ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து, உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து, புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே, சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின் புதல்வர்கள் இருவரும் அந்த யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன் வில் ஏந்திய ஸ்ரீராமருடன் எதிர்த்துப் போர் செய்து, வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்** அமர்ந்த, குபேரப்பட்டினம் போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த, வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 726 - சிறுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, காத்த, குகையில், கொண்டு, நக்கீரரை, உள்ளது, போர், குசர், வழியில், போகாமல், நம்பி, ழன்று, பெறுவேனோ, வந்து, பெருமாளே, குந்த, இந்தப்