பாடல் 707 - கோடைநகர் - திருப்புகழ்

ராகம் - பிருந்தாவன
ஸாரங்கா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2
தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன தானன தந்தன தந்த தந்தன ...... தனதான |
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத் தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள் ஈவது கண்டுத கைந்த குண்டர்கள் சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல் வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன் ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே கோழி சிலம்பந லம்ப யின்றக லாப நடஞ்செய மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும்பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே. |
நட்பைக் காட்டிப் பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர், போதித்த நன்றியை மறந்த கீழோர், அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர், பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர், மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர், சத்திய வார்த்தை என்பதையே ஒழித்த கீழோர், எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர், நீதியையும், தர்மத்தையும் அழித்த கீழோர், குற்றமும், ஆணவமும் மிகுந்துள்ள கீழோர், பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர், தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும் வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர். மராமரம் ஏழும், வலிய குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், யாவுமே முன்பே வலிமை குன்றி அழியும்படியும், சந்திரனும், சிவ சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும், ராமசரம் என்ற ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர மூர்த்தியின் அழகிய மருகனே, சேவல் கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய, மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூர் வாசனே, அழகிய தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும், வேலன் என்ற பெயரை அன்புடன் புகழ்கின்ற பெருமாளே, கோடைநகர்* என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே.
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 707 - கோடைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கீழோர், குண்டர்கள், தந்தன, பெருமாளே, தானன, அழகிய, தகதிமி, தந்த, தேவர்களும், ருந்து, வந்த, வருந்தும்