பாடல் 701 - மாடம்பாக்கம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான |
தோடு றுங்குழை யாலே கோல்வளை சூடு செங்கைக ளாலே யாழ்தரு கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே தூம மென்குழ லாலே யூறிய தேனி லங்கித ழாலே யாலவி லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே பாட கம்புனை தாளா லேமிக வீசு தண்பனி நீரா லேவளர் பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர் பாவ கங்களி னாலே யான்மயல் மூழ்கி நின்றய ராதே நூபுர பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ நாட ருஞ்சுடர் தானா வோதுசி வாக மங்களி னானா பேதவ நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி நால்வி தந்தரு வேதா வேதமு நாடி நின்றதொர் மாயா தீதம னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே வாட யங்கியவேலா லேபொரு சூர்த டிந்தருள் வீரா மாமயி லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன் வாச கம்பிற வாதோர் ஞானசு கோத யம்புகல் வாசா தேசிக மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. |
தோடு என்னும் ஆபரணமும் குண்டலங்களும் தரித்த செவிகளினாலும், திரட்சியாக உள்ள வளையல்களைத் தரித்த சிவந்த கைகளாலும், யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும், பரிசுத்தமான ஒளி வீசும் பற்களாலும், (அகில்) புகை ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும் வாயிதழாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும், அவற்றின் ஒளி வீசும் அழகாலும், பாடகம் என்னும் கொலுசைப் புனைந்த கால்களாலும், மிகவும் மணக்கும் பன்னீர் பூசப்பட்டு வளர்ந்துள்ள பாரமான மார்பகங்களாலும் (ஆடவர்களை) வளைக்கும் வேசிகளுடைய வஞ்சக நடிப்பால் நான் காம மயக்கத்தில் முழுகி நின்று சோர்வு அடையாமல், (உனது) சிலம்பு அணிந்த திருவடித் தாமரையின் மேல் என்னை ஏற்றுக்கொள்வதை நீ நினைக்க மாட்டாயோ? நாடிக் காண்பதற்கு அரிதான ஜோதிப் பொருளான சிவபெருமானாக ஓதுகின்ற சிவ ஆகமங்களில், பலவிதமான பேதங்களால் போற்றப்படும், தனக்கு மேல் தலைவன் இல்லாத பரம் பொருளே, மந்திர தந்திர சாஸ்திரங்களில் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி, ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நால் வகையான வேதங்களையும் ஓதித் தரும் பிரமனும், வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியைத்) தரும் நாதனே, பன்னிரு திருப்புயங்களை உடையவனே, ஒளி பொருந்திய வேலைக் கொண்டு சண்டை செய்த சூரனை அழித்தருளிய வீரனே, சிறந்த மயிலை வாகனமாகக் கொண்ட கந்தனே, விநோதனே, நீ சொல்லுக என்று கேட்க சிவபெருமானது முன்னிலையில் வாக்கால் தோற்றுவிக்க முடியாததான ஒப்பற்ற ஞான சுகத்தைப் பிறப்பிக்கும் பிரணவப் பொருளை உபதேசம் செய்த குரு மூர்த்தியே, மாடம்பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருஞ்செல்வமே, தேவர்களின் பெருமாளே.
* மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 701 - மாடம்பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தானா, தந்தன, தானன, மேல், வீசும், தரும், செய்த, ஒப்பற்ற, கொண்ட, சிறந்த, பெருமாளே, ளாலே, தோடு, லாலே, னாலே, நாடி, தரித்த