பாடல் 698 - திருவான்மியூர் - திருப்புகழ்

ராகம் -
தர்மவதி
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதான தானதன தனதான தானதன தனதான தானதன ...... தனதான |
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை குடிலான ஆல்வயிறு ...... குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர் குழல்கார தானகுண ...... மிலிமாதர் புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை பொலிவான பாதமல ...... ரருள்வாயே நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு நிகழ்பொத மானபர ...... முருகோனே நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி சிவநாத ராலமயில் ...... அமுதேசர் திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர் திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே. |
மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை, தாமரையின் அழகிய நுண்ணிய நூல் போன்ற இடை, கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு, காதின் குண்டலங்களுக்கு குறி போகின்ற மீன் போன்ற கண்கள், சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய நிறைந்த மலர், மேகத்தைப் போன்ற கூந்தல் என்ற நற்குணமில்லாத பொது மகளிரின் தோள்களை அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி, இழிந்தவனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி, புகழ் பெற்ற இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி உன் பிரகாசமான பாதத் தாமரையைத் தந்தருள்வாயாக. மெய்யான நாராயணமூர்த்தியின் அழகிய மருகனே, உள்ளக் களிப்பை மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே, பொக்கிஷம் போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே, அசுரர்களின் குலத்துக்கே யமனாக இருந்தவனே, நான்கு திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர்ஸனம் என்ற சக்ரதாரியான திருமால், இந்திரன் முதலான தேவர்கள் பணிகின்ற சிவபெருமான், விஷத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசருடைய விளக்கம் வாய்ந்த குழந்தையே, ஆகாயத்தை அளாவும்படியான அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள திருவான்மியூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவான்மியூர் சென்னையின் ஒரு பகுதி. மயிலாப்பூருக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 698 - திருவான்மியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, அழகிய, தானதன, தகிட, பெருமாளே