பாடல் 695 - திருமயிலை - திருப்புகழ்

ராகம் -
சுபபந்துவராளி
தாளம் - கண்ட ஏகம் - 5
தாளம் - கண்ட ஏகம் - 5
தனனா தனனாதன தனனா தனனாதன தனனா தனனாதன ...... தனதான |
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு திரிவே னுனையோதுதல் ...... திகழாமே தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால் வரைமா துமையாள் தரு மணியே குகனேயென அறையா வடியேனுமு ...... னடியாராய் வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு மகநா ளுளதோசொல ...... அருள்வாயே இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு மிழிவா கிமுனேயிய ...... லிலராகி இருளா மனதேயுற அசுரே சர்களேமிக இடரே செயவேயவ ...... ரிடர்தீர மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ மதமா மிகுசூரனை ...... மடிவாக வதையே செயுமாவலி யுடையா யழகாகிய மயிலா புரிமேவிய ...... பெருமாளே. |
அலைகள் கொண்ட நீண்ட கடலால் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு உன்னை ஓதிப் புகழ்தல் இன்றித் திரிகின்றேன். நாள்தோறும் முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று, அப்படிப்பட்ட மனம் வாய்த்த பின்னர், சிவகுமாரனே, மும்மூர்த்திகளின் தலைவனே, இமயமலை மாதரசி உமையாள் பெற்ற மணியே, குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக. தலைமையான யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள் அனைவரும், தாழ்ந்த நிலையை அடைந்து, முன்னர் தமது தகுதியை இழந்தவராகி, மயக்க இருளடைந்த மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும் துன்பங்கள் செய்யவே, அந்த தேவர்களது துயரம் நீங்க, வீரமிக்க சிறந்த வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட, ஆணவமிக்க சூரனை, அவன் மாமரமாக உருமாறினும், அழித்து வதை செய்த பெரும் வலிமையை உடையவனே, அழகு வாய்ந்த மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 695 - திருமயிலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனனாதன, பெருமாளே, மணியே