பாடல் 694 - திருமயிலை - திருப்புகழ்

ராகம் - கல்யாண
வஸந்தம்
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர் கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர் கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு கனவி கார மேபேசி ...... நெறி பேணாக் கொடிய னேது மோராது விரக சால மேமூடு குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு குவளை வாகும் நேர்காண ...... வருவாயே படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட பணமு மாட வேநீடு ...... வரைசாடிப் பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு பதிய தாக வேலேவு ...... மயில்வீரா வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை வனச வாவி பூவோடை ...... வயலோடே மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே. |
கடுமையான கோபம் குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள், கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்கள், தீவினையையே விரும்புவோர்கள், வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள், (இத்தன்மையருடைய) நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, மிக மோசமான அவலட்சணங்களையே பேசி நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய நான் எதையும் ஆராய்ந்து பார்க்காமல், வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல், விளங்கும் மயிலின் மீது ஆறுமுகங்களும், வேலும், பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த தோள்களும், அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர் எதிரே வருவாயாக. பூமியோடு, பெரிய மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, ஆதிசேஷனின் பணாமகுடங்கள் அசைவுறவும், பெருமலைகளை மோதி, பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும், அசுரர்கள் இறக்கவும், தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும், வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை ஓங்கி மிளிரும் பலா மரங்களின் பெரிய சோலைகளும், தாமரைக் குளமும், நீர்ப் பூக்கள் நிறைந்த ஓடைகளும், வயல்களும், அழகிய மாடங்களும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் ஒன்று கூடி விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே.
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 694 - திருமயிலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, விளங்கும், பெரிய, பெருமாளே, குவளை, மேவி, தகிட, லாவி