பாடல் 687 - திருவொற்றியூர் - திருப்புகழ்

ராகம் -
தன்யாஸி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தனதத்தன தானதன தனதத்தன தானதன தனதத்தன தானதன ...... தனதானா |
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக் கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில் பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே. |
பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, அந்தணரின் தேஜஸை உடையவனே, இன்ப சுபப் பொருளே, அழியாத சுத்தப் பிரகாசனே, மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, மிகத் தூய்மையான பேரொளியோனே, குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்* கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 687 - திருவொற்றியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவனே, தானதன, தனதத்தன, இருக்கும், யான், யாவையும், பெருமாளே, கொண்ட