பாடல் 683 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன தான தானன தானன தந்தன ...... தனதான |
சோதி மாமதி போல்முக முங்கிளர் மேரு லாவிய மாமுலை யுங்கொடு தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே சோலி பேசிமு னாளிலி ணங்கிய மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி மோதி யேகனி வாயத ரந்தரு நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின் மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி மோச மேதரு தோதக வம்பியர் மீதி லேமய லாகிம னந்தளர் மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ ஆதி யேயெனும் வானவர் தம்பகை யான சூரனை மோதிய ரும்பொடி யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர லேறி யேயுறி மீதளை யுங்கள வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே வாதி னால்வரு காளியை வென்றிடு மாதி நாயகர் வீறுத யங்குகை வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் வாச மாமல ரோனொடு செந்திரு மார்பில் வீறிய மாயவ னும்பணி மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே. |
ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி* ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே.
* வடதிருமுல்லைவாயிலில் இருக்கும் சிவபிரான் மாசிலாமணி என்ற நாமம் படைத்தவர்.இத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடிக்குப் பக்கத்தில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 683 - வடதிருமுல்லைவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கொண்டு, தந்தன, போய், செய்து, மேல், அணைத்து, மகிழ்ந்து, அழகிய, வணங்கும், உடைய, உள்ள, தங்கள், விளங்கும், மருகோனே, பெறுவேனோ, மாயவ, மேரு, காளியை, நாயகர், சிறந்த, பெருமாளே, மார்பில், வருகின்ற