பாடல் 68 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - தோடி/அடாணா
தாளம் - அங்தாளம் - 7 1/2 - ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,
தகிடதக-2 1/2
தாளம் - அங்தாளம் - 7 1/2 - ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,
தகிடதக-2 1/2
தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன ...... தனதான |
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. |
பெருத்த வயிறு சரியவும், முடி நரைக்கவும், வரிசையாயிருந்த பற்கள் ஆடவும், முதுகில் கூன் விழவும், உதடு தொங்கிப்போகவும், (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது வரவும், பெண்கள் கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும், முன்னே இருமல் கிண்கிண் என்று ஒலிக்கவும், பின்னே பேச்சு குழறவும், கண்கள் மங்கி குருட்டுத்தன்மை அடையவும், செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும், வந்த நோய்களும், அவற்றின் இடையிலே புகுந்த ஒரு வைத்தியனும், உடல் படும் வேதனையும், சிறு பிள்ளைகள் சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத் தொளைக்கவும், மிக்க துயரம் கொண்டு மனைவி அழுது விழவும், யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர போராடவும், மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும், உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில் முருகா, நீ விரைவில் மயில்மேல் வரவேண்டும். என் அப்பனே வா, ரகுநாயகனே வா, குழந்தாய் வா, மகனே இதோ வா, என் கண்ணே வா, என் ஆருயிரே வா, அழகிய ராமனே வா, இங்கே வா, அரசே வா, பால் குடிக்க வா, பூ முடிக்க வா, என்றெல்லாம் அன்போடு கோசலை கூறி அழைக்க வந்த மாயன் திருமால் மனம் மகிழும் மருமகனே, குறவர் குல இளங்கொடியான வள்ளி அணையும் அழகா, தேவர்களின் சிறைவாசம் ஒழிய, அசுரக் கூட்டம் வேரோடு மடிய அழித்த தீரனே, நிலவும், பாம்பும், நதியும் சூடிய பரமர் தந்தருளிய குமரனே, அலை கரையில் மோதும் திருச்செந்தூரில் இன்பமாய் வீற்றியருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 68 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வருக, தந்த, தனனதன, வந்த, தனனா, பெருமாளே, விழவும், அடையவும், அரசே, நின்று, மைந்த, தகிட, மகனே