பாடல் 668 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான |
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட் டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட் டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச் சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற் சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத் தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப் பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக் கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே. |
ஒருவரை சிறு வீட்டின் படுக்கை மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு, அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு, வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர் தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்* செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச் செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை, எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க. தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து எறிந்த வேலாயுதனே, குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட குற மகளாகிய வள்ளியை அணைபவனே, ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும் வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே, கமுக மரத்தின் குலை தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன் மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 668 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், மார்க்கம், மீது, கயல், பழங்கள், இடுதல், தொழில், ஞானம், முன்பு, நான், விட்டு, வைத்து, பெருமாளே, சரியை, கிரியை, எல்லா, பொருளை, செய்து