பாடல் 65 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - பைரவி;
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான |
துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய குன்றெங்குஞ் சங்குவ லம்புரி பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே. |
துன்பப்பட்டு, தேகம் மெலிந்து, மிகவும் நொந்துபோய், அன்பையும் நல்ல குணங்களையும் மறந்து, தேக காந்தி மங்கும்படி செய்யும் பெண் மயக்கம் என்னும் துக்கத்தில் நான் அணுகி சிக்கிக்கொள்ளாமல் இன்பத்தைக் கொடுத்து தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே நமது தஞ்சம் என்று கொண்டு எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி நீ அருளவேண்டும். உன் பக்கத்திலேயே இணைந்து நிற்கும் குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களைக் கண்டு இதுவே எனக்குப் புகலிடம் என்று நின்று அன்பின் முறைப்படி அவள் பாதத்தில் கும்பிட்ட இளையோனே, பசுமைப் பொலிவு பெற்ற கடலின் கரையில் விளங்கும் குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 65 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தந்தந்தந், பெருமாளே, வந்தருள், தஞ்சமெ, னும்படி