பாடல் 64 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஆபோகி;
தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை - 14
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தனத்தந்தன தனத்தந்தன தனத்தந்தன ...... தனதானத் |
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி ...... மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி ...... னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி ...... சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட ...... அறியாரே அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர மனுக்குந்தெரி ...... வரிதான அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு மரற்கும்புரி ...... தவபாரக் கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை வரிக்குங்குரு ...... பரவாழ்வே கிளைக்குந்திற லரக்கன்கிளை கெடக்கன்றிய ...... பெருமாளே. |
உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது, விரக வேதனையால் தவிக்கின்றேன், கொடி போன்ற யான் மன்மதனது பாணத்தால் தடை படுகின்றேன், தனிமையில் நின்று திகைக்கின்றேன், மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன், என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர். திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ? திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமனுக்கும் காண்பதற்கு முடியாத திருவடியையும் சிவந்த ஜடாமுடியையும் உடைய சிவ பிரானுக்கும், செய்தவம் நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும், கருணை புரிந்து உபதேசித்த மேலான குருமூர்த்தியே, சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த அரக்கன் சூரன் தன் குலத்தோடு அழியும்படிக் கோபித்த பெருமாளே.
* குடத்தில் தோன்றியதால் அகஸ்தியருக்கு கும்பமுநி எனப் பெயர். முருகனிடம் ப்ரணவ மந்திர உபதேசம் பெற்றவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 64 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தன, பாடி, பெருமாளே, நின்று