பாடல் 648 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் -
பீம்பளாஸ்; தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள் கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான் கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான் பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன் பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற பதமடியர் காண வந்த ...... கதிர்காமா அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே. |
யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள் நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி மடியில் கை போட்டுப் பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய பொல்லாத வம்புக்காரன் என்றும், வஞ்சனைக்காரன் என்றும், வசைச் சொற்கள் கூறி என்னை நெருங்குவார்கள். ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை செய்து, என் சதைகளைத் துண்டுதுண்டாகச் சேதித்து, இரும்பை உருக்கிய கரு நீரை என் வாயிலே விட்டு, கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி, என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில் என் இடரைக் கண்டு, அடியேன் முன் விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும். திருப்பரங்குன்றத்திலும், திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும், இடும்பனால்* கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே, பல்லாயிரம் திருத்தலங்களிலும், பல கோடி மலைகளிலும் நிலையாக இருந்து, திருவடியைக் கண்டு அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே, பாம்பையும், பிறைச் சந்திரனையும், பூளை தும்பை மலர்களையும், வில்வத்தையும், அருகம்புல்லையும், கொன்றைப்பூவையும், அணிகின்ற சடையர் சிவபிரான் தந்தருளிய முருகனே, பாவங்களை நீக்குபவரும், சிவாய என்ற மூன்றெழுத்துக்களை உடையவரும், சுகத்தைத் தருபவருமான சிவனாரின் குருநாதனே, நீயே கதி என்று நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே.
* இடும்பன் சூரர்களின் போர்ப் பயிற்சி குரு. சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 648 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கண்டு, வந்த, தனதனன, என்னை, கூறி, யமனுடைய, என்றும், பெருமாளே, வேளையில், செய்து, கிரி, தும்பை, ரிந்து, நின்று, லேயி, கோடி, பூளை, தகிட, ரென்று