பாடல் 638 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் -
காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன ...... தனதான |
உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. |
உடுப்பதற்கு உடைகள் வேண்டும். பெரும் பசியைத் தணிக்க உயர்ந்த சுவைநீர் வேண்டும். தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும். கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும். ஊழ்வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ? மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை இனி தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது. சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்¡£வன் சொல்லி அனுப்ப), அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்து, ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*, கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 638 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வேண்டும், தனதான, திசையில், என்றும், தூதர்கள், சிலதூதர், தானன, தனத்தத், தேடட்டும், சொல்லி, அசோகவனத்தை, உள்ள, அனுப்ப, பெருமாளே, தேடுக, மயக்கக், குறிப்பிற், வரலாமோ, கதிர்காம, அந்த