பாடல் 622 - கொடுங்குன்றம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன ...... தந்ததான. |
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது குத்தித்தி றந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி முத்துச்செ றிந்தவட மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர் எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப தைக்கக்க டிந்துமிக இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு முட்கத்தி ரண்டிளகி யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி யொக்கத்து வண்டமளி புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள் செக்கச்சி வந்தமுது பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ் புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர் தட்டுப்ப டுந்திமிர புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய சட்டைக்கு ரம்பையழி பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி னிர்த்தச்ச ரண்களைம ...... றந்திடேனே திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம் முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு டுக்கைப்பெ ரும்பதலை முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம கத்திக்க ளும்பரவ முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர வுக்ரப்பெ ருங்குருதி முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ டிக்கத்து ணிந்ததிர முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே. |
எதிர் நோக்கி போர் புரிந்து மூடப்படும் வலிய ரவிக்கையுடன் போரிட்டு துணியைக் குத்தித் திறந்து, இவை மலைகளே என்னும்படி இருக்கின்றனவும், கஸ்தூரி பூசப்பட்டு நின்று ஒழுகுவனவும், முத்து நிறைந்த மாலை என்கிற யானையைக் கட்டும் சங்கிலிகள் அவைகள் இற்றுப் போகும்படி இடித்து அணைந்து, நகங்களாகிய கொத்துகின்ற அங்குசத்துடன நெருங்குகின்ற யானையைச் செலுத்துவோர் (அணைதற்கு வரும் காமுகர்கள்) எதிரிலே நின்று போற்ற, மார்பை மிதித்துழக்கிக் கிடந்து (பார்த்தோர்) உடல் பதைக்கும்படி அடக்குவனவும், நன்றாக, ரதியின் கணவனான மன்மதனது மணி முடியை மோதி, முக்கண்ணனும் அஞ்சும்படி திரண்டும் நெகிழ்ந்தும் இளைஞர்தம் உயிரை உண்ணும் கவளமாக வட்ட வடிவுடன் நின்று அசைந்து, முன்னே பருத்து, கோபித்துப் பொருதற்கு உற்றனவுமான யானை போன்ற மார்பகங்கள். பொதுவில் (நின்று உடலை) விற்கும் விலைமாதரின் தாமரை போன்ற கரங்களைத் தழுவி, ஒரு சேர நெகிழ்ந்து படுக்கையில் புகுந்து சல்லாபிக்க, ஒழுங்கான ரேகைகள பரந்துள்ள விஷமுள்ள கரிய கயல் மீன் போன்ற கண்கள் செக்கச் சிவந்து, அமுதம் பொதிந்த சொற்கள் பதற்றத்துடன் வர, கூந்தல் கட்டும் அவிழ, முத்தத்துடன் அன்பு பாராட்டி மேலே விழுகின்ற அதிசயத்தைத் தருகின்ற புணர்ச்சி வலையில் அகப்பட்டு அழுந்தி, உயிர்த் தடை ஏற்பட்டு, அலைச்சல் உறும் இருள் சேர்ந்த கடலில் கலக்கம் உற்று, அளவில்லாத இந்திரியங்களால் ஆன மானிடச் சட்டையாகிய இந்த உடல் அழிகின்ற காலத்திலும், அருள் புரியும் முருகனே, பரிசுத்தமான கொடுங்கிரி என்ற பிரான் மலை* என்னும் தலத்தில் (நீ காட்சி தந்த) நடன பாதங்களை மறக்க மாட்டேன்**. மேற்கூறிய ஜதிகளுக்கு எற்ற வகையில் தாளம் முற்பட்டு ஒலிக்கும் திமிலை என்ற ஒரு வகைப்பறை, கரடி கத்தினாற்போல் ஒலிக்கும் ஓசை உடைய பறை, வளைவுள்ள துடி, இடை சுருங்கிய பறை, பகுவாய்ப்பறை, முரசு எனறு பல தாள வாத்தியங்கள் கூடி மொகுகொகு என்று ஒன்றோடொன்று பொருந்தி ஒலி செய்ய, பேயுருவங்கள் பரவிப் போற்ற, மேலே ஆகாயத்தில் பல கொடிகளும் பக்கங்களில் பறந்தெழுந்து அலைய, அதிகமாக தலையற்ற உடல் வரிசைகள் ஆங்காங்கு தங்கி ஆட, வயதான கழுகுகள், காகங்கள், கருடன்கள் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு வர, உக்கிரத்துடன் ரத்த வெள்ளத்தில் முழுகி எழுகின்ற பைரவர்கள் நடனம் செய்து, அண்டங்கள் எல்லாம் வெடிபட, துணிவு கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களைத் தாக்கி, அவர்களது தலைகளைத் திருகியும் வெட்டியும் போர்க்களத்தில் சண்டை செய்த தம்பிரானே.
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
** இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகன் நிர்த்த தரிசனம் தந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 622 - கொடுங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத்த, தந்ததன, தனதனன, நின்று, கண்டிகட, உடல், மேலே, தந்த, ஒலிக்கும், போற்ற, பிரான், டிடிடுடுடு, தெதததெத, திதிதிதிதி, திக்கட்டி, தாளம், தம்பிரானே, கட்டும்