பாடல் 594 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான |
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர் தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே. |
மெதுவாக கடைக் கண்ணைக் காட்டுவர். நறு மணம் வீசும் கூந்தலை பின்னர் காட்டுவர். மஞ்சள் நிறத்திலுள்ள பொன் அணிகலன்களைக் காட்டுவர். காமப் பற்று உள்ளவர்கள் போல் வஞ்சனை செய்து தங்கள் இரக்கத்தைக் காட்டுவர். மனதில் அன்பு உள்ளவர்கள் போல் காட்டுவர். வளப்பம் மிக்க வெண்பற்களின் பாகங்களைக் காட்டுவர். மார்பாகிய பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர். கொப்பூழின் சுழியைக் காட்டுவர். சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர். தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர். முதலில் காட்டிய நேசம் ஒடுங்குதலைக் காட்டுவர் ஆகிய பொது மகளிர்பால் அன்பு காட்டுவதை விட மாட்டேனோ? கட்டப்பட்ட எருக்கம் பூவை நிலவு அணிந்த சடையின் கண் சூடுபவரும், உமா தேவியைப் பாகத்தில் உடையவருமான தந்தையாகிய சிவ பெருமான் உனது திருவடியைத் தொழும் குரு நாதனே, பசும் பொன்னால் ஆய பதக்கத்தை அணிந்த அன்பர்களாகிய தேவர்களை எதிர்த்து வந்த பகைவர்களாகிய அசுரர்கள் தோல்வியுறுமாறு, சென்று அவர்களைப் புறங் காட்டி ஓடச் செய்த வயலூரனே, பூங்கொத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பொருந்திய அந்தக் குற மகள் வள்ளியுடன் விளையாடல் செய்து, அவளைக் கும்பிடுதற்கு பெருங் களிப்புடன் தழுவியவனே, மலையில் கடப்ப மலர் மலரும் வாசனை பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 594 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டுவர், தந்தத், தாத்தன, தனத்தந், திருச்செங்கோடு, அணிந்த, என்றும், அன்பு, இருப்பதால், உள்ளவர்கள், காட்டுவ, பெருமாளே, போல், செய்து