பாடல் 593 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான |
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் தும்ப றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி யொத்தச் சங்க டத்துப் புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல் துன்று மிச்சைப் பண்ட னுக்குப் பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத் தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக் கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே குன்றெ டுத்துப் பந்த டித்துக் கண்சி வத்துச் சங்க ரித்துக் கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா கொம்பு குத்திச் சம்ப ழுத்தித் திண்ட லத்திற் றண்டு வெற்பைக் கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம் சென்று ரித்துச் சுந்த ரிக்கச் சந்த விர்த்துக் கண்சு கித்துச் சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ் செண்ப கத்துச் சம்பு வுக்குத் தொம்ப தத்துப் பண்பு ரைத்துச் செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே. |
இறத்தல் கூடியதாய், பொய்யாக முடியும் பிறப்பு என்பதை இணைக்கும் கயிற்றை அறுத்துத் தள்ளி, இன்று ஓர் ஒழுக்கத்தில் நிற்க புத்தியில் கொஞ்சமேனும் கவனித்து மேற்கொள்ள அறியாமல், காய்ந்து கொதித்தும், முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி, தாமரை போன்ற, மை பூசிய கண்ணைக் கொண்ட, விலைமாதர்கள் மீது, பொருந்தி நெருங்கும் ஆசைப் பாத்திரனாகிய எனக்கு நற்குணத்தைக் கொடுத்து சிறப்பு அடையச் செய்து, வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள் உள்ள) வயலூர் என்னும் தலத்தில் தொண்டு செய்யும் பணியை மேற்கொண்டு, நான் பார்த்துப் பற்றுவதற்கு தண்டை, சிலம்பு முதலியவற்றை அணிந்தவையும், பரிசுத்தமான செந்நிறமுள்ளவையுமான திருவடித் தாமரையை தந்து அருள்க. கிரவுஞ்ச கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண் சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே, கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை சென்று தாக்கி தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண் களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி கொள்ளும், செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி, திருச்செங்கோட்டில்** உறையும் அழகிய பெருமாளே.
* கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு, மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம் நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 593 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தத்தத், கொண்ட, எடுத்து, என்னும், அந்த, இருப்பதால், என்றும், திருச்செங்கோடு, தோலை, அழகிய, கயாசுரன், தள்ளி, சங்க, முக்கிச், தொண்டு, தண்டை, பெருமாளே, சென்று, போல்