பாடல் 586 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான |
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த ...... குழல்மீதே பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் ...... முகமீதே மந்தார மன்றல் சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் ...... தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற ...... னருள்தாராய் கந்தா அரன்றன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் ...... மருகோனே கன்றா விலங்க லொன்றாறு கண்ட கண்டா வரம்பை ...... மணவாளா செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப ...... அணிவோனே திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த ...... பெருமாளே. |
பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 586 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தான, தந்த, இருப்பதால், என்றும், திருச்செங்கோடு, பெருமாளே, கன்றா, நிரம்ப, மேலும்