பாடல் 568 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான |
சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே. |
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கி¡£டங்களின் கனத்தை உடையதும், பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ¡£ங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு), நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, தகுதி உள்ள ஊமைப் பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் - திருவிளையாடல் புராணம்.
** 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 568 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பொருள், உள்ள, மதுரையில், தானான, என்னும், கால், மாறி, உனது, உண்மைப், தனதன, அகப், புலவர்கள், குலத்தில், புராணம், மதுரை, திருவிளையாடல், தூக்கி, இறையனார், வைத்த, செட்டி, பாகத்திலும், காவேரி, நீதி, மடமகள், தேவாதி, கோனாடு, பெருமாளே, இடது, வலது, அழகிய, கொண்ட, பெருமான்