பாடல் 562 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான |
வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில் விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால் வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும் மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான் மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு தடத்து மோக்ஷம தருளிய பலமலர் மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இர¨க்ஷ வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா இலக்ஷ¤ மீச்சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல் இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத் திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும் செருப்ப ராக்ரம நிதிசர வணபவ சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே. |
வந்தவரை விரட்டுதல் செய்து அவர்களைத் தம் வசப்படுத்த வல்ல விஷமிகள். சேலையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள். பொய்யர். வெகு வேகத்தில் தம் மீது விருப்பம் வரும்படி செய்ய வல்லவர்கள். தமக்குச் சேர வேண்டிய பொருளைக் கொடுக்க இயலாதவர்களாக இருந்தால் வெறுப்புடன் பார்ப்பவர்கள். வஞ்சகர். நடனம் செய்யும் பாதத்தை உடையவர். கொடியோர்கள் ஆகிய விலைமாதர்களின் கஸ்தூரி முதலிய நறு மணம் வீசும், பேரழகு மேம்பட்டு விளங்கும் மார்பகத்திலும், நிற்கின்ற சாயலிலும், யாரையும் மயக்குவித்து ஆசை மொழிகளைச் சொல்லும் சொற்களிலும், கண்களிலும், அவிழ்ந்து விழும் பூ மணக்கும் கூந்தலிலும், அதன் ஒளியிலும், மதிக்க முடியாத தளர்ந்த இடையிலும், நடையிலும் ஈடுபட்டு வீணாக நான் மயக்கம் கொண்டு (அப் பொதுமகளிருக்குக் கொடுப்பதற்காக) பொருள் சேகரிக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், வீட்டுப் பேற்றை அருளிய, பல மலர்களும் நறு மணம் வீசும் பெருமை வாய்ந்த உனது திருவடிகளை கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன். இருளே இல்லாத தேவ லோகத்தில் விளங்கி நிற்கும் ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் துன்பங்கள் நீங்கவும் அவனுக்குப் பாதுகாப்பைத் தந்து அளித்த முருகனே, பன்னிரு கரத்தனே, குகனே, வீரனே, லக்ஷ்மிகரம் விளங்கும் ஈசுவரனே, பசுபதியாகிய சிவபெருமானுக்குக் குருவே, எல்லா நாடுகளுக்கும் அரசனே, புகழும் வெற்றியும் பொருந்திய இலக்கர்* ஆகியோர் உள்ள சேனைக் கூட்டத்தின் மேலே பறந்து உலவும் பட்சி அரசனாகிய கருடன் மகிழ்ச்சி மிக அடைய, திருட்டுக் குணமுடைய அரக்கர்கள் பொடியாகிச் சிதறுண்ணும்படி, திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தால் கடுமையுடன் வேகமாக வந்த அகங்காரம் கொண்ட வேடர்கள் வணங்கும்படியும் முறையிடும்படியும் செய்த மயில் ஏறும் போர் வீரனே, என் நிதியே, சரவணபவனே, சிவந்த ஒளியுள்ள கிரணங்களை உடைய சூரியனும், பனியனைய குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வருகின்ற திருச்சிராப்பள்ளி மலையில் நிலை பெற்று விளங்கும் பெருமாளே.
* தேவியின் சிலம்பின் நவமணிகளில் இருந்து நவசக்திகளின் விறல் வீரர்கள் இலக்கர் (வீரபாகு முதலியோர்) வந்துதித்தனர் - கந்த புராணம் 1.12.11.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 562 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனத்த, விளங்கும், உடைய, தாத்தன, கிரணங்களை, வீசும், வீரனே, வேண்டிய, எடுத்த, பெருமாளே, செய்து, மணம்