பாடல் 535 - வள்ளிமலை - திருப்புகழ்
ராகம் - ...; தாளம்
-
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த ...... தனதான |
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால் வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய் யில்லத்து றாக்க ...... வலைமேவு பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின் பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர் கல்விக்க லாத்த ...... லையலாமோ அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல்குக்கு டார்த்த ...... இளையோனே அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல் கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர் வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. |
இந்த உலகத்தையே வென்று குவிக்கத் தக்க, முல்லை மலர்ப் பாணம் தரித்த கையை உடைய, நாண் பூட்டிய வில்லாக கரும்பு அமைய, வேண்டுமென்றே செய்யும் மன்மதனது லீலையால் (நான்) ஒளி மங்கிப் போய், ஆசை கொண்டு, உரைக்கும் சொல்லும் போய், மனம் நெகிழ்ந்து, பொய் வாழ்வு உடைய (பரத்தையர்) வீட்டுக்குப் போய், கவலை மிகுந்து, அங்கே பல துன்பங்கள் நேர, அவற்றில் மூழ்கி அல்லல் படுகின்ற இந்த உடலை உடையவன் நான். நன் மார்க்கத்தில் சேராத ஆறு சமயங்களின் பல பொருள் மார்க்கத்தை உடைய வல்லரக்கர் ஆகிய முரட்டுப் பிடிவாதக்காரர்களின் குதர்க்க வாதக் கல்விப் போரில் புகுந்து நான் அலைபடலாமோ? (விரக வேதனையால்) இந்த இராக் காலம் ஒழியாதா என்னும் சொல்லை உடைய (ஒரு தலைக் காமம் உற்ற) தலைவிக்கு இதமாக, அவளோடு ஒத்து (விடியலை உணர்த்தும்) குரல் கொடுத்து கொக்கரிக்கும் சேவலைக் கொடியாகக் கொண்ட இளையோனே, இருண்ட இரவையும், சிறிது வழி தெரிவிக்கும் பகலையும் கடந்த மேலிடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவு கடந்த கருணை வள்ளலே, வலிய அழகிய (நந்தியாம்) ரிஷப வாகனத்தை உடையவரும், தில்லைப்பதிக்கு ஏற்றவரும், (பார்வதியாம்) சிவகாம வல்லிக்கு உகந்தவருமாகிய சிவபெருமான் அருளிய புதல்வனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று தினைப்புனத்தைக் காத்த வள்ளி அம்மைக்கு கணவனாக வாய்த்த பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியார் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 535 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, நான், போய், வள்ளி, தாத்த, தய்யத்த, கடந்த, பெருமாளே, காத்த, இளையோனே, வீக்கு, மேற்றர், வல்லிக்கு, வள்ளிக்கு, வாய்த்த