பாடல் 527 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன தாந்தன தானதன ...... தனதான |
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும் வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங் கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும் மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப் பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில் வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும் வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய் பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக பாண்டிய னீறணிய ...... மொழிவோனே வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர் வேங்கட மாமலையி ...... லுறைவோனே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே. |
கோங்கு மரத்தின் முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும் மார்பகங்களும், செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவைகளை) மிகவும் விரும்பி, பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல் மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம் நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக. தோழியும் வேடர்களும் திகைக்கும்படி சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும் வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன் வாழ்பவனே, பாண்டவர்களின் தேரைச் சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும் ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே, புலியும் யானையும் வேங்கை மரமும் மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே, தங்களுக்குக் குறைகள் உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 527 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்தன, வேண்டிய, தானதன, ஆகிய, சிறந்த, வேங்கை, மிகுந்த, பெருமாளே, பூங்கொடி, வேங்கையு, மாந்தளிர்