பாடல் 505 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -
ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான |
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த தோழா கடப்பமல ...... ரணிவோனே ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. |
நாடித் தேடி ஆராய்ந்து பார்த்து, இந்தப் பிறவித் தொழிலுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணி, அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழி, என் முற்பிறவி வினையின் காரணத்தால், நாதனே, உன் திருச் சந்நிதியிலோ உன் மனத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து, பலவிதமாக உன்னுடைய திருவருளின் பெருமையே பேசி, என்றும் வாடாத உனது திருவடி மலர் என்னும் முக்தியைக் கொடுத்தருள் கொடுத்தருள் என்று குழறி, வாய் கிழிபட்டு நிற்கும் எனக்கு உன் கிருபை கூடும்படி வந்தருள்வாயாக, என் மனத்துயரங்களெல்லாம் தீர்ப்பாயாக, உன்னைத் தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் நேர் எதிரிலே முன்பு எழுந்தருளி வர வேண்டுகிறேன். தெய்வமணியின் ஒளி விளங்கும் உருவத்தாளும், பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே, பரிசுத்த மூர்த்தியே, துதித்து வணங்குபவர்களின் நேயனே, அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த அருமைத் தோழனே, கடப்ப மலரினை அணிபவனே, மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும், ஞானம் என்ற ஆசனத்தை (பீடத்தை) உடையவளும், மிக்க கம்பீரமானவளும் ஆன குறமகள் வள்ளியின் அழகிய கணவனே, ஈசனே, ஒப்பற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற செல்வமே, தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 505 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தனத்ததன, கொடுத்தருள், பெருமாளே, மலர்