பாடல் 49 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா |
குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே உழைக்குஞ்சங் கடத்துன்பன் சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங்குந் தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங் கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங் கலைக்கொம்புங் கதித்தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்குங் கடற்சங்கங் கொழிக்குஞ்செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே. |
குழைத்துக் கலவையான சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி போல் நின்று தோன்ற, இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று பேசுவது போல செவ்விய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல் தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து மிகுதியாக உண்டு, உடலாகிய பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல், உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான சிவந்த தண்டையிலும், மேலான கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும் என்னைச் சேர்த்து அருளுக. தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன் போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும் சிறந்த பிள்ளையே, அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற, எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே, கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக் கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 49 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தம், கொண்டு, தழைத்துள்ள, சிவந்த, சேர்த்தும், எப்போதும், சிறந்த, மீன், பெருமாளே, அழகிய, போல், செவ்விய, கயல்