பாடல் 48 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - குந்தல
வராளி ; தாளம் - அங்கதாளம் - 14 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2,
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2,
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தானாந்தனனா |
குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல் குலவு குரம்பை முருடு சுமந்து குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய் தடவியல் செந்தில் இறையவ நண்பு தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே சரவண கந்த முருகக டம்ப தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே சுடர்படர் குன்று தொளைபட அண்டர் தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா துரிதப தங்க இரதப்ர சண்ட சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே. |
குடல், கொழுப்பு, எலும்பு, நீர், மலம், பெருகும் உதிரம், நரம்பு, சீழ், மாமிசம், இவையெல்லாம் மூடிய தோல், ஆகியவற்றால் ஆன சிறு குடிலாகிய இந்தக் கட்டையைச் சுமந்து, கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும், நாயினேன் தளர்ச்சியுற்றும், நெருங்கிவரும் மன்மதனின் அம்பை ஒத்த கரிய கண்களை உடைய பெண்களின் தோள்களில் மூழ்கி அயர்ந்தும், அறிவு அழிந்து போகும் தீய குணம் அற்றுப் போக உன்னிரு பதங்களைத் தந்து நீ ஆட்கொண்டு அருள்வாயாக. விசாலமான பெருமையை உடைய திருச்செந்தூரில் தங்கும் இறைவனே, அன்பைத்தரும் குறப்பெண் வள்ளிக்கு வாழ்வாகும் திருப்புயத்தோனே, சரவணபவனே, கந்தா, முருகா, கடப்பமாலை அணிந்தோனே, ஒப்பற்ற மயிலின் மீது ஏறி உலகை வலம்வந்தவனே, ஒளிபரந்த கிரெளஞ்ச மலை தொளைபடவும், தேவர்கள் வணங்கவும், ஒப்பற்ற சிவந்த கரத்தினின்று வேலைச் செலுத்தியவனே, வேகமாகச் செல்லும் பறவையாகிய மயிலை தேராகக் கொண்ட மாவீரனே, அலைவீசும் கடலின் நடுவே (மாமரமாய்) நின்ற சூரனுக்கு யமனாக வந்தவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 48 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதிமி, தந்த, தனதன, தகிட, ஒப்பற்ற, உடைய, சுமந்து, தந்து, நின்ற