பாடல் 462 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம் -
தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான |
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள் சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள் செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள் குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள் நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள் குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் இபமொடு வெதித்தச் சிங்க மும்பல இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா அரிகரி யுரித்திட் டங்க சன்புர மெரிதர நகைத்துப் பங்க யன்சிர மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல் குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே. |
(வந்தவர்கள் பணத்தைத்) திருடுவோர். தம் விருப்பப்படி கைப்பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள். மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள். அறிவிலர். கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள். கண்டித்துப் பேசுபவர்கள். எப்போதும் சதி செய்பவர்கள். (வேண்டுமென) காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு உங்கார ஒலியை எழுப்பும் இழிந்தவர். முட்டாள்கள். ஊடல் செய்துகொண்டு ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள். செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள். மிக்க காமம் பூண்ட குருடிகள். சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை வெளியிடும், கள்ளுண்ட உதட்டினர். (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்து பிணக்கம் கொள்ளுபவர்கள். தந்திரவாதிகள். (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள். கண்களால் (தம் பக்கம்) இழுத்துக் கொள்ளுபவர்கள். நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள். குணத்தைப் பற்றிக் கூறுங்கால், முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) இணக்கம் நல்லதோ? ரிஷிகள் இனத்தோர் கூட்டமும், உமது பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுள்ளோர் கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும் நிலை குலையும்படி வந்த சூரர்கள், அவர்களுடைய யானைக் கூட்டங்களோடு, வேறுபட்ட சிங்கங்களும், பல தேர்களும் எந்தத் திக்கும் பிளவு உண்டு அழிய, குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உள்ள உடல்கள் நாசம் அடைய வேலைச் செலுத்தியவனே, சிங்கத்தையும் யானையையும் தோலை உரித்து, மன்மதனையும் திரி புரங்களையும் எரிபட்டு அழியச் சிரித்து, பிரமனுடைய (ஐந்து) தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து முன்பு பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவனே, தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தைக் காட்டி, குறப் பெண்ணாகிய வள்ளி (உனது) வலப் புறத்தில் சிறப்புற்று வீற்றிருக்க, அழகிய சிதம்பரத்தில் புக்கு விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 462 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்டவர்கள், தந்தன, தனத்தத், தந்த, குணம், கொள்ளுபவர்கள், விளங்கும், கூட்டமும், தமது, படைத்தவர்கள், பெருமாளே, டுங்கு, குருடிகள், டம்பு, அழகிய, செய்பவர்கள்