பாடல் 42 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ..........;
தாளம் - ........
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா |
கருப்பந்தங் கிரத்தம்பொங் கரைப்புண்கொண் டுருக்கும்பெண் களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந் துவக்குண்டும் பிணக்குண்டுங் கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச் செருத்தண்டந் தரித்தண்டம் புகத்தண்டந் தகற்கென்றுந் திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ...... கொடுமாயும் தியக்கங்கண் டுயக்கொண்டென் பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ் சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே அருக்கன்சஞ் சரிக்குந்தெண் டிரைக்கண்சென் றரக்கன்பண் பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா அணிச்சங்கங் கொழிக்குந்தண் டலைப்பண்பெண் டிசைக்குங்கொந் தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா புரக்குஞ்சங் கரிக்குஞ்சங் கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம் புதுக்குங்கங் கையட்குந்தஞ் ...... சுதனானாய் புனைக்குன்றந் திளைக்குஞ்செந் தினைப்பைம்பொன் குறக்கொம்பின் புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே. |
கர்ப்பத்துக்கு இடமாய் ரத்தப் பெருக்குள்ள புண் போன்ற உறுப்பைக் கொண்டு உருக்கும் பெண்களைப் பார்த்து, அப்போதே அவர்கள் பின்னே போய், அவர்களுடன் கூடி மகிழ்ந்தும், ஊடல் கொண்டும், ஒற்றுமை கொண்டும், மனம் பிணங்கியும், இன்பம் கொண்டும், துன்பப்பட்டும், நிலை தடுமாறியவனாய், போருக்கு ஏற்ற தண்டாயுதத்தைக் கையில் ஏந்தி பூமியில் வந்து உயிர்களை வருத்தும் யமனுக்கு எப்போதும் அச்சம் உற்று, அழகிய திண்ணிய இப்பூமியில் ஐந்து புலன்களுடன் அழிந்து போகும் என் சோர்வினைக் கண்டு, உய்யும்படி என்னை ஆட்கொண்டு, எனது பிறப்பாகிய இடரையும், சிறையிட்டது போன்ற துன்பத்தையும் நீக்கி, உன்னுடைய திருவடிகளின் இன்பத்தைத் தருவாயாக. சூரியன் உலவுகின்ற அலைகள் வீசுகின்ற கடலிடத்தே போய் சூரனது பெருமையெல்லாம் அழியும்படி கோபித்த ஒளி வேலனே, அழகிய சங்குகளை ஒதுக்கி எறிந்து, எழுந்து வீசும் அலைகடலின் பெருமை எட்டுத் திசைகளிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரேசனே, உலகங்களை எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே, வயல்கள் விளங்கும் வள்ளி மலையில் மகிழ்ச்சி அடைகின்ற, செந்தினையைக் காத்திருந்த பசும் பொன் போன்ற குற மகளாகிய வள்ளியின் குளிர்ந்த மார்பகத்தின் மீது துயில் கொள்ளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 42 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தம், கொண்டும், விளங்கும், தேவிக்கும், அழகிய, இன்பம், பெருமாளே, போய்