பாடல் 404 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட ...... லலையாலே தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு ...... மழியாதே தருண மணிபொழி லருணை நகருறை சயில மிசையினில் ...... வரவேணும் முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் ...... குருநாதா முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத ...... மயில்வீரா குறவர் மடமக ளமுத கனதன குவடு படுமொரு ...... திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல ...... பெருமாளே. |
நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே.
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.நிலவு, குழல் இசை, கடல் ஒலி, மன்மதன், அவனது பாணம் ஆகியவை விரக நோயை வளர்ப்பவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 404 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, அழகிய, வாய்ந்த, செலுத்திய, மன்மதன், கொடிய, பெருமாளே