பாடல் 34 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - கீரவாணி;
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்த தானதன தனதனன தந்த தானதன தனதனன தந்த தானதன ...... தந்ததான |
உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் மதகரட தந்தி வாயினிடை சொருகுபிறை தந்த சூதுகளின் வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனையு ணர்ந்து தாளிலுறு வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ இதழ்பொதிய விழ்ந்த தாமரையின் மணவறைபு குந்த நான்முகனும் எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் இருவிழிது யின்ற நாரணனும் உமைமருவு சந்த்ர சேகரனும் இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் முதல்வசுக மைந்த பீடிகையில் அகிலசக அண்ட நாயகிதன் மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே முளைமுருகு சங்கு வீசியலை முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே. |
கடலின் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனை நிறைந்த கூந்தல் நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், இரத்த ஓட்டம் நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி, துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய மாமிச நாற்றம் உடையதாய், மதநீர் பாயும் சுவடு கொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்ற வடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின் வடிவு கொண்டனவாய் குடங்களைத் தகர்த்து வளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய், அழகு குலைந்து போன மங்கையர்களான (விலை) மாதர்களுடைய அழகின் (நிலையாமை) நிலையை உணர்ந்து, (உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழி அடிமையாகிய நான்அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ? இதழ்களின் கட்டுகள் விரிந்த தாமரை மலரின் நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும், வீசுகின்ற அலைகள் மோதும் பாற்கடலில் விஷம் மிகுந்த பாம்பாம் ஆதிசேஷன் மேல் இரு கண்களும் துயில் கொள்ளும் திருமாலும், உமையம்மையை இடப்பாகத்தில் சேர்ந்துள்ள சந்திரசேகர தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும் சந்நிதியின் முன்பு நின்று வணங்கும் முழுமுதற் கடவுளே, சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே, சிறந்த இருக்கையில் (அமர்ந்திருந்த உன் தாயின் மடியில் கிடந்து), எல்லா உலகங்களுக்கும் தலைவியாகிய பார்வதிநாயகியின் குவிந்த திருமார்பில் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய தலைவனே, மிக்க இளமையான சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி, மேகநிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி, ஞானம் முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 34 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, கொண்ட, தானதன, தனதனன, நாற்றம், அலைகள், நெருங்கி, மொண்டு, தகிட, தம்பிரானே