பாடல் 33 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ........
தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான |
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ குருமணி வயிர மிழித்துக் கோட்டிய கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர் குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே முளையிள மதியை யெடுத்துச் சாத்திய சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே. |
கருமையாக இருண்டு விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும், இறுக்கக் கட்டிய ஆடையை தளர்த்திக் காட்டவும், இரண்டு விழிக் கடைகளாலே செருக்குடன் பார்க்கவும், ஆண் மக்களோடு வெற்றிலையையும் வெட்டுப் பாக்கையும் நடிப்புடன் கேட்கவும், மறு மொழிகள் பலவற்றை இணக்கத்துடன் சொல்லியும், இடையிடையில் சற்று புன்னகை செய்து காட்டியும், (இது) எங்கள் வீடு தான் வருக என்று ஒரு சொல்லைச் சொல்லி வளைத்து மாட்டுவித்தும், விரிந்த மலர்ப் படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும், வந்த பொருளுக்குத் தக்க படி உருக்கம் காட்டி சரசமாடியும், நிந்தையாலே வனை மனை (பின்னர்) நிந்தை மொழி கூறி அலங்கரிக்கப்பட்ட வீட்டில் நுழைந்தால் அடித்து விரட்டவும், ஒரு தலைக் காமத்தினராகப் (தம் இச்சைப்படி) புணரும் கொடிய வேசியர்களின் பழிப்பு நீங்க உனது திருவடியைப் போற்றுவது எந்த நாளோ? நிறமுள்ள வைர மணிகளை அடித்துத் தள்ளி, வளைந்த இள மூங்கிலின் உருவம் வெளுத்துத் தோற்றுப் போம்படியான வெண்மையையும், ஒலிக்கின்ற இசையை உடைய சிற்றாறு ஒதுக்கி இறைக்க, பெருகிய நீர் பாய்கின்ற ஆழம் படுகின்ற காட்டாற்றின் மத்தியில் அடைபட்டு எழுந்த மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினுள்ள சோலையின் அடர்ந்த குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும், பூப்புனைந்தும், மகளிர் விளையாடியும், மணம் வீசும் பூங்கொத்துக்களை விட்டு கதிர் விடும் தினை விளையும் புனத்தின் நடுவில் உள்ள பரணின் மீது தான் இருத்தலைக் காட்டிய அரும்பும் மார்பகங்களை உடைய இளைய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு ஆட்பட்ட திருச்செந்தூர்ப் பெருமாளே, முளைக்கின்ற இளம் பிறையை எடுத்துச் சூடிய சடாபாரம் தாங்கிய சிவபெருமானுக்கு சாத்திர முறையை ஓதி அருளிய முருகனே, தவ நிலையைக் காக்கும் முனிவர்களுடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 33 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாத்தன, தனத்தத், விரிந்த, தான், பெருமாளே, சாத்திர, உடைய, வெளுத்துத், காட்டவு, சேர்க்கவும், நிந்தையாலே, காட்டிய