பாடல் 308 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
நாட்டகுறிஞ்சி; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தானதனத் தனதனன ...... தனதான தானதனத் தனதனன ...... தனதான |
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே யானுமுனக் கடிமையென ...... வகையாக ஞானஅருட் டனையருளி ...... வினைதீர நாணமகற் றியகருணை ...... புரிவாயே தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே. |
இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே, ஸரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே*, முருகனே, திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே, ஆறு படை வீட்டுத்** திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு. எனவே ஸரஸ்வதி சகோதரி உறவு.
** ஆறு படை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (பல மலைகள்), பழமுதிர்ச்சோலை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 308 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, ஸரஸ்வதி, உறவு, பெருமாளே, தனதான, தானதனத், தனதனன, தகதிமிதக