பாடல் 307 - ஆறு திருப்பதி - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தனதன தனதானன தனதன தனதானன தனதன தனதானன ...... தனதான |
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் ...... விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக் கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருட ...... னினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென தரணியி லடியார்கண ...... நினைவாகா சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய ...... பெருமாளே. |
அலை கடலுக்கு ஒப்பாகிய கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகா பாபிகள், தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான பேச்சு பல பேசுபவர்கள், அசட்டு மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், (நான்) மனத்தில் விரும்பிய கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக. அலை வீசும் கங்கை நீரைத் தலையில் தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே, அசுரர்கள் குடி அழியும்படியாகவும், தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும் கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே, சிறந்த பிரமன் அறிய மாட்டாத ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம் நினைக்கின்ற அழகனே, சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.
* ஆறு திருப்பதி: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன.இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள். ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 307 - ஆறு திருப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனதானன, மேல், வீடு, அநியாயமான, பெருமாளே, அசுரர்கள், தமது