பாடல் 3 - விநாயகர் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸத்வனி /
ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் - 8
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் ...... தனதான தந்ததனத் தானதனத் ...... தனதான |
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. |
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 3 - விநாயகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானதனத், தந்ததனத், தகதகிட