பாடல் 274 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - பெஹாக்;
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனனத் ...... தனதான |
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் சொற்பா வெளிமுக் ...... குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் ...... பிணிதோயும் இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் ...... பிறவாதே எத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் ...... தரவேணும் தப்பா மற்பா டிச்சே விப்பார் தத்தாம் வினையைக் ...... களைவோனே தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ தத்தாய் தணிகைத் ...... தனிவேலா அப்பா கைப்பா லைப்போல் சொற்கா வற்பா வைதனத் ...... தணைவோனே அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமரப் ...... பெருமாளே. |
உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற நெருப்பு, நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்), மூன்று குணங்களும் (ஸத்வம், ராஜஸம், தாமசம்), மூவாசைகளும் (மண், பெண், பொன்) (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும், (ஒன்பது ஓட்டைகளுடன்) கிழிந்த தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும், காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது ஆசைப்படுவதை மேற்கொண்டு, உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல், உன்னைத் துதிக்காதவர்களின் கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும் அவர்களுக்கு எட்டாததுமான உன் திருவருளைத் தந்துதவ வேண்டும். தவறாமல் உன்னையே பாடித் தொழுபவர்கள் எவரெவரோ அவரவர்களின் வினைகளை நீக்குபவனே, செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய சூரனை அழித்தவனே, மெய்யான சிவஞான பண்டிதனே, திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலவனே, அந்த சர்க்கரைப் பாகு போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும், தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை மார்புறத் தழுவுபவனே, உயர்ந்தவனே, என்றும் உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே, பரம பிதாவே, குமாரக் கடவுளே, பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 274 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, மீண்டும், ஆகிய, பெருமாளே, அப்பா