பாடல் 260 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான |
கிரியு லாவிய முலைமிசை துகிலிடு கபட நாடக விரகிக ளசடிகள் கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் ...... விரகாலே க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள் முழுது நாறிக ளிதமொழி வசனிகள் கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் ...... பொருளாலே பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர் அதிக மாவொரு பொருள்தரு பவரொடு பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே பகழி போல்விடு வினைகவர் திருடிகள் தமையெ ணாவகை யுறுகதி பெரும்வகை பகர மாமயில் மிசைவர நினைவது ...... மொருநாளே அரிய ராதிபர் மலரய னிமையவர் நிலைபெ றாதிடர் படவுடன் முடுகியெ அசுரர் தூள்பட அயில்தொடு மறுமுக ...... இளையோனே அரிய கானக முறைகுற மகளிட கணவ னாகிய அறிவுள விதரண அமரர் நாயக சரவண பவதிற ...... லுடையோனே தரும நீதியர் மறையுளர் பொறையுளர் சரிவு றாநிலை பெறுதவ முடையவர் தளர்வி லாமன முடையவ ரறிவினர் ...... பரராஜர் சகல லோகமு முடையவர் நினைபவர் பரவு தாமரை மலரடி யினிதுற தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே. |
மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள், கெட்ட நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள், வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம் செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள், முழுதும் துர் நாற்றம் வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள், படுக்கையின் மீது ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள், பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள், அதிகமாக ஒரு பொருளைக் கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம் பிறக்க அணைபவர்கள், கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும் திருடிகள், (அத்தகைய) விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற் கதியைப் பெறும் வழியை, எனக்கு நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு நாள் உண்டாகுமோ? திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற ஒட்டாமல் துன்பப்பட, உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே, அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம் படைத்தவனே, தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே, தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம் கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த வகையில் தவம் புரிபவர்களும், சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும், மேலான அரசர்களும், எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி இனிது பொருந்த திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 260 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மேல், தானன, அன்பு, மீது, வள்ளி, இல்லாத, உடையவர்களும், இன்பம், தாமரை, திருடிகள், பழைய, அரிய, இளையோனே, முடையவர், தரும, பெருமாளே