பாடல் 251 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன ...... தந்ததான |
ஏது புத்திஐ யாஎ னக்கினி யாரை நத்திடு வேன வத்தினி லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ ஓத முற்றெழு பால்கொ தித்தது போல எட்டிகை நீசமுட்டரை யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே ஓத மொய்ச்சடை யாட வுற்றமர் மான்ம ழுக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே மாதி னைப்புன மீதி ருக்குமை வாள்வி ழிக்குற மாதி னைத்திரு மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே. |
எனக்கு புத்தி ஏது ஐயனே? இனிமேல் நான் யாரைச் சென்று விரும்பி நாடுவேன்? வீணாக இறப்பதுதான் என் தலைவிதியோ? எனக்கு நீயே தாயும் தந்தையுமாக இருந்தும் நான் இந்த விதமாகவே தவித்திடலாமா? உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான் ஆளாகலாமா? என்னை இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் ஐயனே*, என் நிலை தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில், உலகோர் நகைப்பார்கள் ஐயனே, தந்தையின் முன் குழந்தை ஓடிச்சென்று, பால் மணம் மாறாத வாயால் குரலெழுப்பி அழுதால், இந்தக் குழந்தையை யார் எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக இப்பூமியிலே விட்டு விடுவார்களோ? எனக்கு இந்த உண்மை சிந்தையிலே தோன்றலாகாதோ? வெள்ளமாய்ப் பெருகி எழும் பாற்கடல் பொங்கியது போல எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த மூடர்களான அசுரர்களை ஓடும்படி வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே கொண்ட எங்கள் அரசனே, கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த சடாமுடி ஆடவும், பொருந்தி அமர்ந்த மானும், மழுவும் ஏந்திய கரங்கள் ஆடவும், அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார் தந்தளித்த செல்வமே, பெரிய தினைப்புனத்தின் மீது இருந்தவளும், மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை உடையவளுமான குறப்பெண் வள்ளியை, உன் அழகிய மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம் கந்த வேளே, மன்மதன் வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய மாதர்கள் ஆச்சரியப்படும்படியான பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 251 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, என்னை, நான், எனக்கு, அழகிய, வாழும், பெரிய, கொண்ட, ஆடவும், நீயே, மாதி, அற்புத, தம்பிரானே, ஐயனே, திருவடிகளில்