பாடல் 235 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான |
வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச் சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச் சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே. |
நீண்ட கூந்தலை விரித்தும், தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களை சுழற்றிப் பார்த்தும், வா என்று அழைத்துச் சிரித்தும், தோடும் குண்டலமும் ஆட பேச்சுக்கள் பேசியும், இயந்திரப் பொம்மை என்று சொல்லும்படி பல அங்கங்களையும் காட்டியும், மணமுள்ள மார்பகங்களின் மேல் உள்ள கச்சை ஆட்டியும், அழகாக சீரான ஆடையை தளர்த்திப் போர்த்தும், நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டியும், தீ தெய்ய என்ற தாள வரிசைகளுடன் நடனம் செய்தும், பாடல்களைக் குயில் போல் பாடியும், தம்மைச் சேரும்படி அழைத்தும், தம்மையே சார்ந்திருக்கும்படி மருந்து வகைகளைத் தந்தும், தம் விருப்பப்படி ஆட்டி வைத்தும், சீரான பொருளைப் பறிக்கின்ற பொய்யான வேசையரது உறவு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி), அசுரர்கள் பதைக்கவும், தேர்களையும் யானைகளையும் அழியும்படி தாக்கி, சூரனையும் அவனுடைய எழு கிரிகளையும் சுட்டெரித்து யம லோகத்துக்கு அனுப்பிய வேலனே, பரிசுத்தமான மொழியுடன் சிரித்து, (மார்க்கண்டருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்து எடுத்த தோலை உடையாகக் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானுக்கு (உபதேச மொழியை) இத்தலத்தில் உரைத்துப் போந்தவனே, அழகிய சடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடைய தேவி பார்வதி விசேஷமாகப் போற்றுகின்ற மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே, பனை ஓலை இதழைக் குழையாகக் கொண்டவள், மண்ணால் மூடப்பட்ட பொன் போன்ற நிறத்தவள், (திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய) குறப் பெண் வள்ளி நாயகிக்கு பொருத்தமானவனே, சுவாமி மலையில் விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 235 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போல், தானன, தாத்த, தனத்தத், காட்டியும், அழகிய, பெருமாளே, சீரான, காட்டி, தூக்கி, சுழற்றிப், பார்த்து, நெளித்துக், தாக்கி