பாடல் 195 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த ...... வடிவேலா பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே. |
தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே திரட்சிபெற்று வளையவந்து, அவளது வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல் மனித உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று, பதினாறு வயதை அடைந்து, ஆணழகனாக ஆகி, அழகிய மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும் திரிந்து, அன்புடனே அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி, பெரும் பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த மூடனாகிய அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க. தினைப்புனத்தில் வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே, மலர்க்கணையால் போர் புரிந்த மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய வடிவேலனே, பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும், மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும், நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே, பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து, பழநிமலை மீது நின்றருளிய பெருமாளே.
* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து 'மாதங்கி' எனப் பெயர் பெற்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 195 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதனன, பிறந்து, மீது, அவளது, பெற்று, பழநிமலை, கந்த, வென்று, பெருமாளே